Skip to main content

பொன்னியின் செல்வன் பாதையிலே - 3

 'பொன்னியின் செல்வன் பாதையில் இரண்டாம் நாளின் தொடர்ச்சி. முந்தைய பதிவை இங்கே படிக்கவும். 


கடம்பூர் மாளிகை சென்றதை கூறும் முன் அவ்விடத்தின் சிறப்பை எடுத்துரைத்தால் நல்லது என்பதால்...

வீரநாராயண ஏரி (எ) வீராணம் ஏரியில் ஆடி பதினெட்டாம் பெருக்கை மக்கள் விமர்சையாய் கொண்டாடுவதையும் அதன் பிறகு வீரநாராயண பெருமாள் கோவில் (எ) காட்டுமன்னார் கோவிலில் 'ஆழ்வார்க்கடியான் நம்பியை' சந்தித்தான் வந்தியத்தேவன். பராந்தக சோழனின் மகனும் பட்டது இளவரசனும் சோழ வடபுல சேனையின் தலைவனுமான ராஜாதித்ய சோழன் இங்கே முகாமிட்டபொழுது வீரர்கள் ஓய்வெடுத்து காலம் கடத்துவதைவிட மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கோடு கட்டப்பட்டதே இந்த ஏரி. பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனின் பயணமும் இந்த இடத்திலிருந்தே தொடங்கியது. ஏரி கட்டிமுடிக்கப்பட்ட பின் நீரின் தெய்வமான பெருமாளுக்கு கோவில் எழுப்பியிருந்தான் இளவரசன். ராஜாதித்ய சோழன் தக்கோலம் போரில் வீர மரணம் எய்தினான். ஆகையால் யானைமேல் துஞ்சிய தேவன் எனும் பட்டம் பெற்றான் என்பது கொசுறு தகவல்.

காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலனின் ஓலையை தஞ்சைக்கு எடுத்துப்போகும் வழியில் தனது நீண்ட நாள் நண்பனான கந்தமாறனை சந்திக்கத்தான் முதல்முறை வீராணம் எரிக்கரையிலிருந்து கடம்பூர் மாளிகை சென்றான் வந்தியத்தேவன். பின்னாளில் இதே மாளிகை தனது நெருங்கிய நண்பனின் உயிரை குடிக்கும் என்பதும் அதன் பழி தன் மீதே விழுமென்பதையும் அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. 

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து பலசிற்றூர்கள் வழியாக பயணித்தோம். ஆயிரமாண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகராக இருந்ததற்கான எந்த வரலாற்று எச்சங்களும் இல்லாமல் மிகவும் பின்தங்கிய, நவ நாகரீகம் தனது முத்திரையை அழுத்தமாக இவ்விடங்களில் பதிக்கவில்லை என்பதை பயணத்தில் கண்கூடாக கண்டறிந்தோம். 

குறுகலான சாலையின் வழியே ஏறக்குறைய 10 கி.மீ. பயணித்தபின்பு வடவாறு கரையை எட்டிப்பிடித்திருந்தோம். வீராணம் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாகவும், பொன்னியின் செல்வனில் பல முக்கிய நிகழ்வின் சாட்சியமாகவும் வடவாறு எங்களை வரவேற்றது. 


கடம்பூருக்கு இவற்றின் கரையிலேயே பயணிக்கவேண்டியிருந்ததால் சிறிதுநேரம் நின்று சோழர்களின் வரலாற்றை சங்கேத மொழியில் கூறும் நீரோட்டத்தை ரசித்து விட்டு பயணத்தை தொடர்தோம். போகும் வழி சுலபமாக இருக்கவில்லை. ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே போகும் அளவுதான் பாதையின் அகலம். அதன் தன்மையோ சொல்லில் விவரிக்க முடியாது. ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையின் சிறு மிச்சங்களே எஞ்சியிருந்தன. இடதுபுறம் வடவாறு ஓட, வலதுபுறம் ஆற்றை ஒட்டி அமைந்த்திருந்த நெல் வயல்வெளி. அறுவடை நேரம் என்பதால் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. 

பிரமாண்ட லாரிகளும் தங்கள் முதுகில் நெற்களஞ்சியங்களை சுமந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன. சாலை மோசமாக இருந்தாலும் இப்படிப்பட்ட கண்கொள்ளா காட்சியை ரசிக்காமல் இருக்கத்தான் முடியுமா? 

இறுதியாக கடம்பூரை அடைந்தோம். மேல கடம்பூர், கீழ கடம்பூர் என இரண்டாக தற்போது பிரிந்திருக்கிறது. கடம்பூர் மாளிகை இருந்ததற்கான ஆதாரங்கள் தற்போது எதுவும் இல்லை. கல்கி கடம்பூரை மிக பிரமாண்டமான, செல்வ செழிப்பான ஊராக உருவகப்படுத்தியிருப்பார். ஆனால், தற்பொழுதோ மொத்தமே 10-15 தெருக்களுடன் மிகவும் பின்தங்கிய கிராமமாகவே காட்சியளித்தது. 



நாங்கள் சென்ற சாலையில் மேற்கொண்டு செல்ல முடியாததால் மாளிகையை தேடி வயல்வெளிகளில் நடக்க ஆரம்பித்தோம். ஏறக்குறைய இரண்டு கி.மீ. நடந்து ஊருக்குள் சென்றோம். போகும் வழியில் ஊரின் பழமையான கோவிலை கண்டோம். ஆதித்த கரிகாலனின் கொலையாளிகள் கடம்பூர் மாளிகையின் யாழ் களஞ்சியத்திலிருந்து கொலைக்குப்பின் சுரங்கப்பாதை வழியாக இக்கோவிலுக்கு வந்ததாக எங்கேயோ எப்பொழுதோ படித்த ஞாபகம். நாங்கள் சென்றதோ மதியம் 2 மணியளவில் என்பதால் கோவில்நடை பூட்டியிருந்தது. அக்கம் பக்கம் விசாரிக்கலாம் என்றாலும் கொரோனா ஊரடங்கை மிஞ்சும் வகையில் ஊரில் ஆள்நடமாட்டமே இல்லை. வெகுதூரம், அதுவும் அறுவடை நடக்கும் வயல்வெளியில் நடந்ததால் தண்ணீர் தாகம். 

பழைய வீட்டின்முன் இருந்த பெட்டி கடையில் தண்ணீர் பாட்டில் கேட்டு அணுகினோம். கடைக்காரர் பாட்டில் நீர் இல்லை என்பதால் வீட்டிலிருந்து தண்ணீர் கொடுத்தார் (நகரங்களில் மறந்தும் செய்யமறுக்கும் செயல்). பேச்சுவாக்கில் ஊரைப்பற்றி அவரிடம் விசாரிக்கும்போது அவர் சொன்ன தகவல் உற்சாகம் அளித்தது. கடம்பூரின் வரலாறு அவருக்கு தெரிந்திருந்தது. வரலாற்று நிகழ்வு நடந்த இடம் மேல கடம்பூர்தான் என்று அறுதியிட்டு சொன்னவர், அரண்மனை இருந்த இடம் மட்டும் சரியாக தெரியவில்லை என்றார். 

கல்கியின் வாசகர்கள் பலர் வந்தியத்தேவனின் பாதையில் பயணித்து குறிப்புகளை எழுதியுள்ளனர். அதன் அடிப்படையிலும், கூகிள் மேப் காட்டிய இடத்தின் அடிப்படையிலும் மாளிகை 'பெரிய மேடு' என்னும் பகுதியில் அமைந்திருப்பதை கணிக்கமுடிந்தது. அவ்விடம் தற்போது வயல்வெளியாக உள்ளது. பெரிய மேட்டுக்கு ஒருபுறம் வடவாறும், மறுபுறம் கோவிலும் இருந்ததால் அதுவே மாளிகை இருந்த இடம் என முடிவுசெய்யவேண்டியிருந்தது. அவ்விடத்தை காணும்போது காதினுள், சதி ஆலோசனை நடைபெற்ற சமயம் (முதல் முதலில் வந்தியத்தேவன் கடம்பூர் சென்ற நாள்) மாளிகையில் நடைபெற்ற, 'குரவை கூத்து' ரீங்காரமிட்டது.


ஒருவாறாக பொன்னியின் செல்வனில் மிகமுக்கிய இடத்தை பார்த்த சந்தோஷத்தில் மேற்கொண்டு பயணத்தை தொடர எண்ணியபோதுதான் ஒரு விடயத்தை நாங்கள் உணர்தோம். அதிகாலையிலேயே பயணத்தை தொடங்கியிருந்ததாலும், வரும் வழி சௌகரியமாக இல்லாததாலும், மாளிகை இருந்த இடத்தை தேடி அழைந்ததாலும் மிகவும் சோர்வுற்று இருந்தோம். உணவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் கிராமத்தைவிட்டு நகரத்துக்கு (கடைகள் இருக்கும் பகுதிக்கு) செல்ல புறப்பட்டோம். மாலை வேலை நெருங்கியதால் இன்றைய பயணத்தை இத்தோடு முடித்துக்கொண்டு மறுநாள் காலை தொடங்குவதென முடிவுசெய்து சாப்பிட கையேடு தஞ்சை திரும்பினோம். 

ரூமிற்கு செல்லும்வழியில் மராட்டிய அரண்மனை, புகழ்பெற்ற சரஸ்வதி நூலகம் ஆகியவற்றை (கதவு சாத்தப்படும்முன்) கண்டோம். 


நாள்-3

பயண திட்டம் கைகூடாத நாள். தனிப்பட்ட காரணங்களுக்காக மாலைக்குள் வீடு திரும்பவேண்டியிருந்தது. வீரநாராயண ஏரி (எ) வீராணம் ஏரி, வீரநாராயணப்பெருமாள் கோவில் (எ) காட்டுமன்னார் கோவில், சோழர்களின் பழைய தலைநகரான 'பழையாறு' ஆகியவை பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலிலேயே தங்கிவிட்டது. 

இரண்டாம் கட்ட பயணத்தை தொடங்க எண்ணியபோது கொரோனா தனது இரண்டாம் கட்ட பயணத்தை தொடங்கிவிட்டிருந்தது. கூடிய விரைவில் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கவேண்டும். 

வரலாற்று புதினங்களில் வரும் இடங்களை தேடிச்சென்று பார்ப்பது இதுவே முதல்முறை. ஆகையால், திட்டமிடலில் சில தவறுகள் இருந்தன. அடுத்தமுறை அதை நிவர்த்திசெய்து பெரும்பாலான இடங்களை பார்ப்பேன் என்றும் அதை உங்களுடன் பகிர்வேன் என்றும் நம்புகிறேன். 

-முற்றும்-


தினேஷ்

திருவள்ளுவர் ஆண்டு 2052 ஆனி 20

Comments

Popular posts from this blog

Book Review - சில நேரங்களில் சில மனிதர்கள்!

சில நேரங்களில் சில  மனிதர்கள்! ஆசிரியர்: ஜெயகாந்தன்  வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம்   எ ழுத்துலகின் பீஷ்மன் என்று புகழப்படும் ஜெயகாந்தனால் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது இந்த கதை. ஜெயகாந்தன் எழுதிய ' அக்னி பிரவேசம் ' என்ற சர்ச்சைக்குரிய சிறுகதையை மையமாக வைத்து எழுதப்பட்டதே இந்த நெடுங்கதை. சில நேரங்களில் சில மனிதர்கள் கதயை பார்க்கும் முன், அக்னி பிரவேசம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அக்னி பிரவேசம் கதையின் சுருக்கம் இதுவே:  கல்லூரிக்கு முதல் நாள் செல்லும் பாரம்பரிய பிராமண  குடும்பத்தை சார்த்த   இளம் பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் முன்பின் அறிமுகம் இல்லாத மூன்றாம் நபருடன் காரில் வீடு திரும்ப நேரிடுகிறது. தனிமையை பயன்படுத்திக்கொள்ளும் அந்த வாலிபர், பெண்ணை தன் இச்சைக்கு பயன்படுத்திவிட்ட பிறகு வீட்டில் விட்டு செல்கிறார். நடந்தவற்றை தாயிடம் சொல்கிறாள் மகள். கைம்பெண்ணான  தாய்  இந்த விடயத்தை மகனுக்கு கூட சொல்லாமல், பெண்ணை மாற்றானுக்கு மணம்முடிப்பதாக கதை முடிகிறது. இன்றைய காலகட்டத்திற்கு இது சாதாரணமாக, முற்ப...

பொன்னியின் செல்வன் பாதையிலே - 2

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' பாதையில் இரண்டாம் நாள். முந்தைய பதிவை இங்கே படிக்கவும் நாள் -2 இன்று முழுவதும் சோழர்கள் தங்களின் கலை என்னும் அஸ்திரம் கொண்டு மூர்ச்சை அடைய செய்யப்போகிறார்கள் என்பதால் கதிரவன் தனது கதிர்களை பாய்ச்சும் முன்னே தாக்குதலை எதிர்கொள்ள தயாராகினேன்.  பொன்னியின் செல்வன் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரமான 'சேத்தன் அமுதனின்' தோட்டத்தை தான் முதலில் பார்க்கப்போனோம். அதை தேடி வெகுதூரம் அழைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. காரணம் நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு மிக அருகே அந்த வரலாற்று இடம் அமைந்திருந்தது.  சேத்தன் அமுதன் இந்த இடத்தில் தான், தனது தாயுடன் பூந்தோட்டம் அமைத்து சிவனுக்கு கைங்கரியம் செய்துவந்தான். வந்தியத்தேவன் சேத்தனை தஞ்சை அரண்மனை வாயிலில் செம்படை வீரர்கள் அணிவகுப்பின்பொழுது சந்தித்தான். (இந்த செம்படையை மையமாக வைத்தே 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவன் செம்படை சோழர்களுக்கு உதவுவதை போல் கதை வைத்தார்). இந்த சேத்தன் அமுதன் தான் பின்னாளில் உத்தம (எ) மதுராந்தக சோழனாக அரியணையில் அமர்ந்தான்.  அத்தோட்டம் தற்பொழுது சிவன் திருக்கோவில...

My Drama

வி வேகானந்தர் காலிஃபோர்னியாவில் பேசியது பிரசித்தி பெற்ற உரை. ' சகோதர, சகோதரிகளே! ' என்று அவர் பேசியது இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது. அந்த நிகழ்வை போற்றும் வகையில் அந்த பயணத்தின் பின்னணியை கூறும் விதமாக எடுக்கப்பட்டது இந்த நாடகம்.  பொதுவாக என்னுடைய பள்ளியில் 10th & +2 மாணவர்களை நாடகங்களில் நடிக்கவைக்க மாட்டார்கள், காரணம் பொதுத்தேர்வு. ஆனால், 2013 ஆண்டு நான் 12ம் வகுப்பு மாணவன், அதுவும் பொதுத்தேர்வுக்கு 2 மாதங்களே இருந்த காலகட்டம். அவ்வாண்டு விவேகானந்தரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம். இந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என பலரை தேடிய பிறகு என்னை தேர்தெடுத்தனர் தமிழ்த்துறை ஆசிரியர்கள் திரு.முத்து மற்றும் திரு.குமரன். அதற்காக பள்ளி நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. என்னுடைய 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு அவர்களே பொறுப்பென கையெழுத்திட்டனர்.  இவை அனைத்திற்கும் காரணம் ஒன்றே, அது 150ம் ஆண்டு கொண்டாட்டம் என்பதால்  விவேகானந்தர் என்ற நபரை பார்வையாளர்களின் கண்முன்னே நிறுத்தவேண்டும். நான் அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்தேனா என்று எனக்கு தெரியாது ஆனால், நிச்சயம் பேரை கெடுக...